முத்திரைக்கதை காணி நிலம்..7.3.'21








காணி நிலம்

பார்வதி அந்த கிராமத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவள். அவள் கணவர் முனுசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை வடிவேலன். 

அவனுக்குசிறுவயது முதலே பிடிவாதம் கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. பார்வதி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான்.

வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை.

முனுசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் உடல்நிலை மோசமாகியது. பார்வதி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஊதாரியாகத் திரிந்தான். 

முனுசாமி பார்வதியிடம் "பார்வதி. பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா இருக்கணும். நம்ம பிள்ளை ஒருநாள் மனசு மாறி வந்து அதை வெச்சு விவசாயம் செய்யணும். இதான் என் ஆசை"" என்றார்.

முனுசாமியின் உடல்நிலை மோசமாக வழியின்றி நிலத்தை விற்று வைத்தியம் செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததைக் கேட்டும் குடிபோதையில் இருந்த வடிவேலனை நான்குபேர் பிடித்து அழைத்து வந்து கொள்ளி போடவைத்து காரியம் செய்தார்கள்.

போதை தீர்ந்ததும் இனி சொத்துக்கள் தனக்குதான் என்பதால் வடிவேலன் பார்வதியைத் துன்புறுத்தி மீதமிருந்த நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவன் எல்லாவற்றையும் விற்று பணத்துடன் சிங்கப்பூருக்கு  செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான். பார்வதி எவ்வளவோ அழுதும் தடுக்க முடியவில்லை. 

அவர்கள் வீட்டை நல்லவேளையாக விற்காததால் பார்வதி அதைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்தபோது முனுசாமியின் பெட்டியில் ஒரு பத்திரம் கிடைக்க அதை அடுத்த கடைக்காரரிடம் காட்ட அவர் அது ஒரு நிலப் பத்திரம் என்றும், முனுசாமி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இரண்டு  ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும் அது இருக்கும் இடத்தையும் சொன்னார்.

அங்கு சென்று பார்த்தவளுக்கு தன் கணவர் செய்த காரியத்தை நினைத்து கண்கலங்கியது. மகனுக்கு தெரிந்தால் இதையும் விற்றுவிடுவான் என்று சொல்லாமல் இருந்திருக்கிறாரென்று புரிந்தது.

அவளிடமிருந்த ஒரே சொத்து பசுமாடு லக்ஷ்மிதான். தன் மனக்குறையை லக்ஷ்மியிடம் மட்டுமே சொல்லி அழுவாள். அதன் பாலை விற்றும், வீட்டுக்கு முன்னாலிருந்த இடத்தில்  இட்லிக் கடை வைத்தும் நாட்களை ஓட்டி வந்தாள்.அவ்வப்போது மகனின் நினைவு வர கண்கள் கலங்கினாலும் தன் கணவரின் தீர்க்கதரிசனம் தன்னைக் கைவிடவில்லை என்று மகிழ்ந்தாள். 

ஆற்றுக்கு அருகிலிருந்த அந்த நிலத்தில் விவசாயம் செய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரும் என்பதை அறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தாள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை