தந்திரக்கதை




ஆவி வீடு..😖

27.3.'21
எண்..2961

அது ஒரு அழகிய கிராமம். சுதாகரன் அந்த ஊருக்கு பணிமாற்றத்தில் வந்திருந்தான். அங்கு குடியிருக்க வீடு பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் பூட்டியிருந்த அந்த வீடு பட்டது. அக்கம்பக்கம் இருந்தவர்
களிடம் அதுபற்றி விசாரித்தான். 

பல வருடங்களுக்கு முன்பு யாரோ தற்கொலை செய்து கொண்டதால் அங்கு அந்த ஆவி உலவிக் கொண்டிருப்
பதாகவும், அதில் யாரும் குடியிருப்பதில்லை என்றும் அறிந்து கொண்டான். அதன் சொந்தக் காரர்கள் வெளிநாட்டில் இருப்பதால்  ஒரு தரகரிடம் விற்க சொல்லியிருந்தும் பயத்தில் யாரும் அந்த வீட்டை வாங்கத் தயாராக இல்லை.

சுதாகருக்கு இந்த ஆவி விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அந்த தரகர் வீடு சென்று தான் குடியிருக்க அந்த வீடு தரமுடியுமா என்றான்.

அந்தத் தரகர் எதுவும் பிடி கொடுத்து பேசாததோடு அங்கு இறந்தவரின் பேய் இரவில் வந்து உலவுவதாகவும், அங்கு வாழ்ந்தவர்களை பயமுறுத்துவதால் யாரும் குடிவருவதில்லை என்றார். 

சுதாகர் வற்புறுத்திக் கேட்டதால் சாவியுடன் அந்த மனிதரும் உடன் வந்தார். அங்கு ஒரு அறை மட்டும் பூட்டியிருக்க, அதுதான் ஆவி வாழும் அறை என்றும் திறக்க சாவியில்லை என்றும் சொல்லி விட்டார். சுதாகருக்கு  அந்த தரகர்  பொய் சொல்வதாகத் தோன்றியது. இரவு வருவதாக சொல்லிச் சென்றான்.

இரவு சென்றவன், புரோக்கர் தனக்கு வர பயமாக இருப்பதை சொல்லியும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.
இவர்கள் உள்ளே நுழைந்ததும்
யாரோ கழுத்தை நெரித்தால் அலறுவது போல் சத்தம் கேட்டது.

முதலில் அந்த அலறல் சத்தம் டிவி சீரியலில் இருந்து வருவது போலத்தான் கேட்டது. புரோக்கர் உடனே... நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையே? இப்ப தெரிந்ததா? இதுதான் அந்த ஆவியின் அலறல். இங்கு நீங்க வாழமுடியாது. போய் வேற வீடு பார்த்துக்கங்க..என்றார்.

சுதாகருக்கு அவர் சொல்வதில் நம்பிக்கையில்லை. மேலும் பத்து நிமிடங்களானதும் அதே அலறல். இதில் ஏதோ மர்மம் இருப்பது தெரியவர,சுதாகர் இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டு சென்று விட்டான்.

ஒரு பழைய சாவிக் கடைக்கு சென்று சில சாவிகளை வாங்கிக் கொண்டான். இரவு 11மணிக்கு மேல் ஊர் சத்தம் அடங்கியதும் யாருமறியாமல் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றான். அந்த அலறல் சத்தம் வந்த அறையிடம் சென்றபோது எந்த சத்தமும் இல்லை.

கையிலிருந்த டார்ச்சை அடித்து நான்கைந்து சாவிகள் சரியில்லாமல் போக, அடுத்த சாவியைப் போட்டதும் கதவு திறந்தது. உள்நுழைந்தவன் தயங்கியவாறு விளக்கைப் போட்டு பார்க்க அறை முழுதும் மூட்டைகள். அருகில் சென்று முகர்ந்து பார்த்தவன் அத்தனையும் கஞ்சா நிரம்பிய மூட்டைகள் என அறிந்தான்.

அருகிலிருந்த டேப்ரிகார்டரை ஆன் செய்தபோது அந்த அலறல் சத்தம் கேட்டது. இதை வைத்துதான் இங்கு ஆவி இருப்பதாக ஊரை ஏமாற்றி கஞ்சா விற்பதை அறிந்தவன் வீட்டைப் பூட்டிக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று விபரங்களைச் சொல்ல, உடன் அவர்கள் வந்து பார்த்து உண்மையை அறிந்தனர்.

பொழுது விடிந்ததும் அந்தத் தரகர் வீடு சென்று விஷயங்களைக் கூறி அவரைக் கைது செய்தனர். கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வீடு போலீசார் வசமாயிற்று.

ஒரு டேப்ரிகார்டரை வைத்து  ஆவி நாடகம் நடத்தி ஊரை ஏமாற்றிய தரகரைப் பற்றிய
உண்மையைக் கண்டுபிடித்த சுதாகரை ஊர்மக்கள் பாராட்டினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை